1 கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல் எல்லா மக்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.

2 உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.

3 மக்களை நமக்கு கீழ்படுத்தி, தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.

4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)

5 தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

8 தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.

9 மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.

சங்கீதம் 47 ERV IRV TRV