1 தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா? உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா?

2 பல்லாண்டுகளுக்கு முன் நீர் வாங்கிய உமது ஜனங்களை நினைவுகூரும். நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள். நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும்.

3 தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும். பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.

4 ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள். போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.

5 பகைப்படை வீரர்கள் கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.

6 தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி, உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.

7 அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள். அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது. அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள்.

8 பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான். தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.

9 எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை. எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை. யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

10 தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்? உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?

11 தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்? நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.

12 தேவனே, நீணடகாலம் நீரே எங்கள் அரசராக இருந்தீர். இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.

13 தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி செங்கடலைப் பிளக்கச் செய்தீர்.

14 கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்! லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர். பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.

15 நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர். நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.

16 தேவனே, நீர் பகலை ஆளுகிறீர். நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.

17 பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர். நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.

18 தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும். அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.

19 அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்! என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.

20 நமது உடன்படிக்கையை நினைவுகூரும்! இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது.

21 தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.

22 தேவனே, எழுந்து போரிடும்! அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும்.

23 உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும். மீண்டும் மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள்.

சங்கீதம் 74 ERV IRV TRV