1 மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும். சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பாதுகாப்பிற்காக நீ போக முடியும்.

2 நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை, என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறுகிறேன்.

3 மறைவான ஆபத்துக்களிலிருந்தும் ஆபத்தான நோய்களிலிருந்தும் தேவன் உன்னைக் காப்பாற்றுகிறார்.

4 நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும். அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார். தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார்.

5 இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை. நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய்.

6 இருளில் வரும் கொடிய நோய்களுக்கும், நடுப் பகலில் வரும் கொடிய நோய்களுக்கும் நீ அஞ்சமாட்டாய்.

7 நீ ஆயிரம் பகைவர்களைத் தோற்கடிப்பாய். உன் சொந்த வலதுகை பதினாயிரம் பகைவீரர்களைத் தோற்கடிக்கும். உன் பகைவர்கள் உன்னைத் தொடக்கூடமாட்டார்கள்.

8 சற்றுப்பார், அத்தீயோர் தண்டிக்கப்பட்டதை நீ காண்பாய்!

9 ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய். மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.

10 தீயவை உனக்கு நிகழாது, உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.

11 தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார். நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்.

12 உன் கால் பாறையில் மோதாதபடிக்கு அவர்கள் கைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.

13 சிங்கங்களின் மேலும் விஷம் நிரம்பிய பாம்புகளின் மேலும் நடக்கும் வல்லமை உனக்கு வாய்க்கும்.

14 கர்த்தர்: “ஒருவன் என்னை நம்பினால், நான் அவனை மீட்பேன். என் நாமத்தை தொழுது கொண்டு என்னைப் பின்பற்றுவோரை நான் கப்பாற்றுவேன்” என்கிறார்.

15 என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள். நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன். அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன். நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன்.

16 என்னைப் பின்பற்றுவோருக்கு நான் நீண்ட ஆயுளைக் கொடுப்பேன். நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.

Psalm 91 ERV IRV TRV