1 தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.

2 தேவனே, உமது மிகுந்த வல்லமையினால் பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர். அந்நியர்களை அழித்தீர். இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர்.

3 எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை. அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை. நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது. தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர்.

4 என் தேவனே, நீர் என் அரசர். நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.

5 என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம். உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம்.

6 நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன். என் வாள் என்னைக் காப்பாற்றாது.

7 தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர். எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.

8 தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம். உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!

9 ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர். நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர். யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.

10 எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர். எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர்.

11 உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர். தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர்.

12 தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர். நீர் எங்களை விலை பேசவுமில்லை.

13 எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர். அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள்.

14 ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம். தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள்.

15 நான் நாணத்தால் மூடப்பட்டேன். நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.

16 என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர். என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.

17 தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை. ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர். உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை.

18 தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை. உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.

19 ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர். மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர்.

20 தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா? பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை!

21 உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார். எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.

22 தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம். கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம்.

23 என் ஆண்டவரே, எழுந்திரும்! ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்! எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும்.

24 தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்? எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா?

25 நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம், தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.

26 தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும். உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.

Psalm 44 ERV IRV TRV