1 கர்த்தரைத் துதியுங்கள்! மேலேயுள்ள தேவ தூதர்களே, பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!

2 தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்! அவரது சேனைகள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்!

3 சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்! நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!

4 மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்! வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!

5 கர்த்தருடைய நாமத்தைத் துதி. ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!

6 இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார். என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.

7 பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்! சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!

8 தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும் புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.

9 மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும் கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.

10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும் ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.

11 பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார். தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.

12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார். முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.

13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்! அவர் நாமத்தை என்றென்றும் மகிமைப்படுத்துங்கள்! பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!

14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார். தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள். ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள். தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார். கர்த்தரைத் துதியுங்கள்.

Psalm 148 ERV IRV TRV