1 எலிகூ தொடர்ந்து கூறினான்:

2 ⁽ஞானிகளே!␢ என் சொற்களைக் கேளுங்கள்;␢ அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.⁾

3 ⁽நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல,␢ காது சொற்களைப் பகுத்துணர்கின்றது.⁾

4 ⁽நேர்மை எதுவோ அதை நமக்கு␢ நாமே தேர்ந்துகொள்வோம்;␢ நல்லது எதுவோ அதை␢ நமக்குள்ளேயே முடிவு செய்வோம்.⁾

5 ⁽ஆனால் யோபு சொல்லியுள்ளார்;␢ “நான் நேர்மையானவன்; ஆனால்␢ இறைவன் என் உரிமையைப்␢ பறித்துக் கொண்டார்,⁾

6 ⁽நான் நேர்மையாக இருந்தும்␢ என்னைப் பொய்யனாக்கினார்;␢ நான் குற்றமில்லாதிருந்தும்␢ என் புண் ஆறாததாயிற்று.’⁾

7 ⁽யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்?␢ நீர்குடிப்பதுபோல்␢ அவர் இறைவனை இகழ்கின்றார்;⁾

8 ⁽தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்;␢ கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.⁾

9 ⁽ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்;␢ ‘கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால்␢ எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.’⁾

10 ⁽ஆகையால், அறிந்துணரும்␢ உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்!␢ தீங்கிழைப்பது இறைவனுக்கும்,␢ தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும்␢ தொலைவாய் இருப்பதாக!⁾

11 ⁽ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப␢ அவர் கைம்மாறு செய்கின்றார்;␢ அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார்.⁾

12 ⁽உண்மையாகவே, கொடுமையை␢ இறைவன் செய்யமாட்டார்;␢ நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்.⁾

13 ⁽பூவுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்?␢ உலகனைத்தையும் அவரிடம்␢ ஒப்படைத்தவர் யார்?⁾

14 ⁽அவர்தம் ஆவியைத்␢ தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால்,␢ தம் உயிர் மூச்சை␢ மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,⁾

15 ⁽ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்;␢ மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்;⁾

16 ⁽உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்;␢ என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.⁾

17 ⁽உண்மையில், நீதியை வெறுப்பவரால்␢ ஆட்சி செய்ய இயலுமா?␢ வாய்மையும் வல்லமையும் உடையவரை␢ நீர் பழிப்பீரோ?⁾

18 ⁽அவர் வேந்தனை நோக்கி␢ “வீணன்” என்றும்␢ கோமகனைப் பார்த்து ‘கொடியோன்’␢ என்றும் கூறுவார்.⁾

19 ⁽அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய்␢ நடத்த மாட்டார்; ஏழைகளை விடச்␢ செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்;␢ ஏனெனில், அவர்கள் அனைவரும்␢ அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?⁾

20 ⁽நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்;␢ நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்;␢ ஆற்றல் மிக்காரும்␢ மனித உதவியின்றி அகற்றப்படுவர்.⁾

21 ⁽ஏனெனில், அவரின் விழிகள்␢ மனிதரின் வழிகள்மேல் உள்ளன;␢ அவர்களின் அடிச்சுவடுகளை␢ அவர் காண்கிறார்.⁾

22 ⁽கொடுமை புரிவோர்␢ தங்களை ஒளித்துக்கொள்ள␢ இருளும் இல்லை; இறப்பின் நிழலும் இல்லை.⁾

23 ⁽இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க,␢ எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.⁾

24 ⁽வலியோரை நொறுக்குவதற்கு அவர்␢ ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை,␢ அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.⁾

25 ⁽அவர்களின் செயலை அவர் அறிவார்;␢ ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்;␢ அவர்களும் நொறுக்கப்படுவர்.⁾

26 ⁽அவர்கள் கொடுஞ்செயலுக்காக அவர்␢ மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.⁾

27 ⁽ஏனெனில், அவரைப் பின்பற்றாமல்␢ அவர்கள் விலகினர்;␢ அவர்தம் நெறியனைத்தையும்␢ அவர்கள் பொருட்படுத்தவில்லை;⁾

28 ⁽ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்;␢ அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.⁾

29 ⁽அவர் பேசாதிருந்தால்,␢ யார் அவரைக் குறைகூற முடியும்?␢ அவர் தம் முகத்தை மறைத்துக் கொண்டால்,␢ யார்தான் அவரைக் காணமுடியும்?␢ நாட்டையும் தனி மனிதரையும்␢ அவரே கண்காணிக்கின்றார்.⁾

30 ⁽எனவே, இறைப்பற்றில்லாதவரோ␢ மக்களைக் கொடுமைப் படுத்துபவரோ␢ ஆளக்கூடாது.⁾

31 ⁽எவராவது இறைவனிடம்␢ இவ்வாறு கேட்பதுண்டா;␢ ‘நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்;␢ இனி நான் தவறு செய்யமாட்டேன்.⁾

32 ⁽தெரியாமல் செய்ததை␢ எனக்குத் தெளிவாக்கும்;␢ தீங்கு செய்திருந்தாலும்,␢ இனி அதை நான் செய்யேன்.’⁾

33 ⁽நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது,␢ கடவுள் உம் கருத்துக்கேற்ப␢ கைம்மாறு வழங்கவேண்டுமா?␢ நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்;␢ நான் அல்ல; ஆகையால்␢ உமக்குத் தெரிந்ததைக் கூறும்.⁾

34 ⁽புரிந்துகொள்ளும் திறன் உடையவரும்␢ எனக்குச் செவி சாய்ப்பவர்களில்␢ ஞானம் உள்ளவரும் இவ்வாறு சொல்வர்;⁾

35 ⁽யோபு புரியாமல் பேசுகின்றார்;␢ அவர் சொற்களும் பொருளற்றவை.⁾

36 ⁽யோபு இறுதிவரை சோதிக்கப்படவேண்டுமா?␢ ஏனெனில், அவரின் மொழிகள்␢ தீயோருடையவைபோல் உள்ளன.⁾

37 ⁽யோபு தாம் பாவம் செய்ததோடு␢ கிளர்ச்சியும் செய்கின்றார்;␢ ஏளனமாய் நம்மிடையே அவர்␢ கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராக␢ வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.⁾

Job 34 ERV IRV TRV