1 ⁽என் உயிர் ஊசலாடுகின்றது;␢ என் நாள்கள் முடிந்துவிட்டன;␢ கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது.⁾

2 ⁽உண்மையாகவே, எள்ளி நகைப்போர்␢ என்னைச் சூழ்ந்துள்ளனர்; என் கண்முன்␢ அவர்தம் பகைமையே நிற்கின்றது.⁾

3 ⁽நீரே எனக்குப் பணையமாய் இருப்பீராக!␢ வேறுயார் எனக்குக்␢ கையடித்து உறுதியளிப்பார்?⁾

4 ⁽அறியமுடியாதபடி␢ அவர்கள் உள்ளத்தை அடைத்துப் போட்டீர்;␢ அதனால் அவர்கள்␢ மேன்மையடைய விடமாட்டீர்.⁾

5 ⁽கைம்மாறு கருதி␢ நண்பர்க்கு எதிராயப் புறங்கூறுவோரின்␢ பிள்ளைகளின் கண்களும் ஒளியிழந்துபோம்.⁾

6 ⁽என் இனத்தார்க்கு அவர்␢ என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்;␢ என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர்.⁾

7 ⁽கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன;␢ என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன.⁾

8 ⁽இதைக்கண்டு நேர்மையானவர்␢ திகைக்கின்றனர்; குற்றமற்றோர்␢ இறைப்பற்று இல்லார் மேல்␢ சீற்றமடைகின்றனர்.⁾

9 ⁽நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்;␢ கறையற்ற கையினர்␢ இன்னும் வலிமை அடைவர்.⁾

10 ⁽ஆனால், இப்பொழுது␢ நீங்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள்.␢ வந்தாலும் ஞானமுள்ள எவரையும்␢ உங்களில் காணமாட்டேன்.⁾

11 ⁽கடந்தன என் நாள்கள்;␢ தகர்ந்தன என் திட்டங்கள்;␢ அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள்.⁾

12 ⁽அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்;␢ ஒளி இருளுக்கு அண்மையில் உளது␢ என்கின்றனர்.⁾

13 ⁽இருள் உலகையே␢ என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில்,␢ என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில்,⁾

14 ⁽படுகுழியை நோக்கி “என் தந்தையே” என்றும்,␢ புழுவை நோக்கி “என் தாயே,␢ என் தமக்கையே” என்றும் புகல்வேனாகில்,⁾

15 ⁽பின் எங்கே என் நம்பிக்கை?␢ என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?⁾

16 ⁽நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது,␢ இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா?⁾

Job 17 ERV IRV TRV