1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி:

2 ⁽உண்மையிலும் உண்மை;␢ நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள்.␢ உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்!⁾

3 ⁽உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு;␢ உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்;␢ இத்தகையவற்றை யார்தான் அறியார்?⁾

4 ⁽கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான்,␢ என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன்.␢ குற்றமற்ற நேர்மையாளனாகிய நான்␢ நகைப்புப் பொருள் ஆனேன்.⁾

5 ⁽இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள்␢ என்னை ஏளனம் செய்கின்றீர்கள்;␢ அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.⁾

6 ⁽கொள்ளையரின் கூடாரங்கள்␢ கொழிக்கின்றன!␢ இறைவனைச் சினந்தெழச் செய்வோரும்␢ கடவுளுக்குச் சவால் விடுப்போரும்␢ பாதுகாப்பாய் உள்ளனர்!⁾

7 ⁽இருப்பினும், விலங்கிடம் வினவுக;␢ உமக்கு அது கற்றுக்கொடுக்கும்;␢ வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.⁾

8 ⁽அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக;␢ அவை உமக்குக் கற்பிக்கும்.␢ ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.⁾

9 ⁽இவற்றில் ஆண்டவரை அறியாதது எது?␢ அவரது கைதான் இதைச் செய்தது என␢ எது அறியாது?⁾

10 ⁽அவர் கையில்தான்␢ அனைத்துப் படைப்புகளின் உயிரும்␢ மனித இனத்தின் மூச்சும் உள்ளன.⁾

11 ⁽செவி, சொற்களைப்␢ பிரித்து உணர்வதில்லையா?␢ நாக்கு, உணவைச்␢ சுவைத்து அறிவதில்லையா?⁾

12 ⁽முதியோரிடம் ஞானமுண்டு;␢ ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.⁾

13 ⁽ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன!␢ ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன!⁾

14 ⁽இதோ! அவர் இடித்திடுவதை␢ எழுப்பிட இயலாது;␢ அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.⁾

15 ⁽இதோ; அவர் மழையைத் தடுப்பாரெனில்,␢ அனைத்தும் வறண்டுபோம்;␢ வெளியே அதை வரவிடுவாரெனில்,␢ நிலத்தையே மூழ்கடிக்கும்.⁾

16 ⁽வல்லமையும் மதிநுட்பமும்␢ அவருக்கே உரியன;␢ ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும்␢ அவருடையோரே!⁾

17 ⁽அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்;␢ நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.⁾

18 ⁽அரசர்களின் அரைக்கச்சையை␢ அவிழ்க்கின்றார்;␢ அவர்களின் இடையில்␢ கந்தையைக் கட்டுகின்றார்;⁾

19 ⁽குருக்களைத் தம் நிலையிலிருந்து␢ விழச் செய்கின்றார்;␢ நிலைபெற்ற வலியோரைக்␢ கவிழ்த்து வீழ்த்துகின்றார்;⁾

20 ⁽வாய்மையாளரின் வாயை அடைக்கின்றார்;␢ முதியோரின் பகுத்துணர்␢ மதியைப் பறிக்கின்றார்;⁾

21 ⁽உயர்குடி மக்கள் மீது␢ வெறுப்பினைப் பொழிகின்றார்;␢ வலியோரின் கச்சை␢ கழன்றுபோகச் செய்கின்றார்;⁾

22 ⁽புரியாப் புதிர்களை␢ இருளினின்று இலங்கச் செய்கின்றார்␢ . காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.⁾

23 ⁽மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்;␢ பின்பு அழிக்கின்றார்;␢ மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்;␢ பின், குறையச் செய்கின்றார்.⁾

24 ⁽மண்ணக மக்களின் தலைவர்␢ தம் அறிவாற்றலை அழிக்கின்றார்.␢ வழியிலாப் பாழ்வெளியில்␢ அவர்களை அலையச் செய்கின்றார்.⁾

25 ⁽இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்;␢ குடித்தவர்போல் அவர்களைத்␢ தடுமாற வைக்கின்றார்.⁾

Job 12 ERV IRV TRV