1 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் திருப்பணிகளைச் சேர்ந்த எல்லா வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், வேலை செய்யத்தெரிந்த கர்த்தரால் ஞானமும், புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரோடும் செய்யத்தொடங்கினார்கள்.

2 பெசலெயேலையும், அகோலியாபையும் கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்களுடைய இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயமுள்ளவர்களாகிய எல்லோரையும், மோசே வரவழைத்தான்.

3 அவர்கள், இஸ்ரவேலர்கள் திருப்பணிகளின் எல்லா வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம், மோசேயிடம் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் மக்கள் காலைதோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளை அவனிடம் கொண்டுவந்தார்கள்.

4 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகளைச் செய்கிற அனைவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாக வந்து,

5 மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை மக்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.

6 அப்பொழுது மோசே இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.

7 செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாகவும் இருந்தது.

8 வேலை செய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள அனைவரும் ஆசரிப்புக்கூடாரத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், வித்தியாசமான நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைச் செய்தான்.

9 மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருந்தது.

10 ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.

11 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது வளையங்களை உண்டாக்கி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டாக்கினான்.

12 வளையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாக இருந்தது.

13 ஐம்பது பொன் கொக்கிகளையும் செய்து, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஆசாரிப்புக்கூடாரம் ஒன்றானது.

14 ஆசரிப்புக்கூடாரத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டு ரோமத்தால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் செய்தான்.

15 ஒவ்வொரு மூடுதிரையும் முப்பது முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருந்தது.

16 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,

17 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,

18 கூடாரத்தை ஒன்றாக இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.

19 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும் அதின்மேல் போட மெல்லிய தோலினால் ஒரு மூடியையும் உண்டாக்கினான்.

20 ஆசரிப்புக்கூடாரத்தில் நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.

21 ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரைமுழ அகலமுமாக இருந்தது.

22 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு பொருந்தும் முனைகள் இருந்தது; ஆசரிப்புக்கூடாரத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.

23 ஆசரிப்புக்கூடாரத்திற்காக செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தெற்குதிசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,

24 அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டாக்கினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும் செய்துவைத்து;

25 ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையும் செய்தான்.

26 ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.

27 ஆசரிப்புக்கூடாரத்தின் மேற்கு பக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,

28 ஆசரிப்புக்கூடாரத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.

29 அவைகள் கீழே இணைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இணைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலும் உள்ள அந்த இரண்டிற்கும் அப்படியே செய்தான்.

30 அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.

31 சீத்திம் மரத்தால் ஆசரிப்புக்கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

32 ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்கு புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்தான்.

33 நடுத்தாழ்ப்பாள் ஒருமுனை துவங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் செல்லும்படி செய்தான்.

34 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால்செய்து, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.

35 இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்கள் உள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டாக்கி,

36 அதற்குச் சீத்திம் மரத்தினால் நான்கு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்செய்து, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.

37 கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்கு திரையையும்,

38 அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவான ஆணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாக இருந்தது.

Exodus 36 ERV IRV TRV