1 தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுளத்தை நாடினார். “கிபயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன்மீதும் அவன் வீட்டார்மீதும் இரத்தப்பழி உள்ளது” என்றார் ஆண்டவர்.⒫

2 அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரைச் சார்ந்தவர் அல்ல; அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல்மீதும் யூதாவின்மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவர்களை அழிக்க முயன்றார்.⒫

3 தாவீது கிபயோனியரிடம், “உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவரின் உரிமைச்சொத்துக்கு ஆசிவழங்குமாறு நான் என்ன கழுவாய் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.⒫

4 கிபயோனியர் தாவீதிடம், “சவுலிடமிருந்தோ அவன் வீட்டாரிடமிருந்தோ நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ எதிர்பாக்கவில்லை; இஸ்ரயேலருள் ஒருவனைக் கொல்ல வேண்டும் என்றும் நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார். தாவீது “நீங்கள் வீரும்புவதை நான் செய்வேன்” என்றார்.⒫

5 கிபயோனியர் அரசரிடம், “நாங்கள் இஸ்ரயேல் எல்லையில் எங்குமே இல்லாமல் ஒழிந்துபோகச் சதிசெய்தவன், எங்களை அழித்தவன் ஒருவன் உண்டு.

6 அவன் புதல்வருள் ஏழுபேர் எங்களிடம் ஒப்புவிக்கப்படட்டும். ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலின் நகரான கிபியோனில் அவர்களை ஆண்டவருக்காகக் கழுவிலேற்றுவோம்” என்று கூறினர். அரசரும் “அவர்களை ஒப்புவிக்கிறேன்” என்றார்.⒫

7 ஆனால், தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டுச் சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த மெபிபொசேத்தை அரசர் தப்பவிட்டார்.

8 அய்யாவின் மகள் இரிசபா சவுலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்களான அர்மோனி, மெபிபொசேத்து ஆகிய இருவரையும் சவுலின் மகள் மேராபு* மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஐவரையும் பிடித்து,

9 கிபயோனியர் கையில் அரசர் ஒப்படைத்தார். இவர்களை ஆண்டவர் முன்னிலையில் மலையில் கழுவேற்றினர். அந்த ஏழுபேரும் ஒன்றாக மடிந்தார்கள். அவர்கள் வாற்கோதுமை அறுவடை தொடங்கிய முதல் நாள்ளிலே கொலையுண்டார்கள்.⒫

10 அப்பொழுது அய்யாவின் மகள் இரிசபா சாக்குத் துணியை எடுத்துக்கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள்முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியுமட்டும் இருந்தாள்; பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனுமதிக்கவில்லை.⒫

11 சவுலின் வைப்பாட்டியான அய்யாவின் மகள் இரிசபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

12 எனவே, தாவீது சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் யாபேசு கிலயாதின் மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்தார். பெலிஸ்தியர் அவர்களைக் கில்போவாவில் வெட்டி வீழ்த்தி, பெத்சான் நகர முற்றத்தில் கழுவிலேற்றினர். அந்த முற்றத்திலிருந்துதான் யாபேசு கிலயாதின் ஆள்கள் எலும்புகளைத் திருடிச் சென்றிருந்தனர்.

13 சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் அங்கிருந்து கொண்டுவந்து கழுவிலேற்றப்பட்ட இவர்களின் எலும்புகளையும் ஒன்று சேர்த்தனர்.

14 சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமின் நிலப்பகுதியான செலாவில் அவர்தம் தந்தை கீசின் கல்லறையில் அடக்கம் செய்தனர். அரசர் கட்டளையிட்டவாறே அனைத்தையும் செய்தனர். அதன்பின் நாட்டுக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கடவுள் கேட்டார்.

15 பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு மீண்டும் போரிட வந்தனர். தாவீதும் அவரோடு அவருடைய பணியாளரும் இறங்கிச் சென்று பெலிஸ்தியரோடு போரிட்டனர். தாவீது களைப்புற்றிருந்தார்.

16 அப்போது மூன்றரை கிலோ கிராம் எடையுள்ள ஈட்டியைக் கையில் ஏந்தி, புதிய வாளை இடையில் கட்டியிருந்த, இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன், தாவீதைத் தாக்கவிருந்தான்.

17 செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனை வெட்டிக் கொன்றான். எனவே, தாவீதின் ஆள்கள் “இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது” என்று அவரிடம் ஆணையிட்டுச் சொன்னார்கள்.⒫

18 இது நடந்தபின் மீண்டும் பெலிஸ்தியரோடு கோபி என்னுமிடத்தில் போர் மூண்டது. அரக்கர் இனத்தவன் ஒருவனான சாபை ஊசாத்தியனான சிபெக்காய் கொன்றான்.⒫

19 மீண்டும் ஒருமுறை கோபில் பெலிஸ்தியரோடு போர் நடந்தது. பெத்லகேமைச் சார்ந்த யாகரே ஓர்கிமின் மகன் எல்கானான் கித்தியனான கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டியின் கோல் நெசவாளரின் படைமரம் போன்றிருந்தது.⒫

20 மீண்டும் காத்தில் போர்மூண்டது. கைகளிலும் கால்களிலும் ஆறு விரல்களுடன், இருபத்து நான்கு விரல்களைக்கொண்ட நெட்டையன் ஒருவன் இருந்தான். அவனும் அரக்கர் இனத்தவன்.

21 அவன் இஸ்ரயேலை பழித்தான். தாவீதின் சகோதரர் சிமயியின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான்.⒫

22 தாவீதின் கையாலும் அவரது பணியாளரின் கையாலும் வீழ்த்தப்பட்ட இந்த நால்வரும் காத்து நாட்டில் அரக்கர் வழிமரபினரே.

2 Samuel 21 ERV IRV TRV